சிறுநீரக கோளாறு வராமல் இருக்க பினபற்ற வேண்டியவை

உணவே மருந்து தமிழ்

சிறுநீரகங்களின் முக்கிய பணி உடலில் தேவைக்கு அதிகமாக சேரும் நீர், உப்புகள், நஞ்சை போன்றவற்றை வடிகட்டி, வெளியேற்றுவது.சிறுநீரில் இருக்கும் தாதுக்கள் மற்றும் அமில உப்புகள் படிவதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றன. இந்தக் கற்கள்தான் சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகக் குழாயில் தோன்றுகின்றன.

இது நாளடைவில் சிறுநீரக கோளாறை உருவாக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் தேவையைவிட குறைவாக சுரக்கும். இதனால் ரத்தத்தில் குளுக்கோசின் அளவு கூடுதலாகிறது. இதை வெளியேற்ற சிறுநீரகங்கள் அதிக வேலை செய்யவேண்டியுள்ளது. இதனால்தான் அவை கூடிய சீக்கிரமே செயலிழக்கிறது. கழிவு வெளியேற்றுவது மட்டுமல்ல, விட்டமின் ’டி’ தயாரிப்பு, இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு ’எரித்ரோபாய்டின்’ உற்பத்தி செய்வது, இரத்த அழுத்தத்தைக் கூடாது காக்க, ’ரெனின்’ சுரப்பைத் தருவது என இதன் பணிகள் இன்னும் ஏராளம். மொத்தத்தில், இதயத்திற்கு அடுத்து ஓயாது உழைக்கும் உறுப்பு சிறுநீரகம் எனலாம்.

சிறுநீரக கோளாறுக்கான காரணிகள்

  • குறைந்த அளவு நீர் அருந்துதல்
  • அதிக அளவு மாமிச உணவு உண்ணுதல்
  • குளிர்பானங்கள் அருந்துதல்
  • வைட்டமின் ‘ஏ’ குறைபாடு
  • வெயில் காலத்தில் உடம்பிலுள்ள நீர் அதிகமாக வெளியேறுதல்
  • சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்றுநோய்கள்
  • சிறுநீரை அதிக நேரம் அடக்கிவைத்திருத்தல் போன்ற காரணங்களால் தோன்றும் கற்கள்

சிறுநீரக கோளாறு அறிகுறிகள்

  • இடுப்பில் தொடங்கி அடிவயிறு, தொடை இடுக்கு வரை கடுமையான வலி எடுக்கும்
  • குமட்டல், வாந்தி, காய்ச்சல் இருக்கும்
  • வலியுடன் சிறுநீர் வெளியேறும்
  • எரிச்சல், நீர்க்கடுப்பு மற்றும் அதிகப்படியான வியர்வை, சிறுநீரில் ரத்தம் (அ) சீழ் கலந்து வெளியேறும்.

உணவே மருந்து என்னும் கருத்தின் அடிப்படையில் சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் உண்ண வேண்டிய சில உணவுகள் பின்வருமாறு

  • நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும்.
  • தர்பூசணி, ஆப்பிள், எலுமிச்சை பழச்சாறுகள் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டவை ‌
  • தர்ப்பூசணி, நாவல், வாழைப்பழம், அன்னாசி, எலுமிச்சை, பப்பாளி, கேரட், சுரைக்காய், பீர்க்கு, மஞ்சள்பூசணி, வெண்பூசணி, வெங்காயம், வெள்ளரி, இளநீர் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

 

  • அதிகமான பருப்பு மற்றும் விதை வகைகளை உட்கொள்ளலாம்
  • மேல் தோல் நீக்கப்படாத முழுமையான தானிய வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்
  • காலையும் மாலையும் சிறுபீளை இலைச்சாற்றை 30 மி.லி. அருந்தி வரலாம்
  • ஒரு கைப்பிடி அளவு நெருஞ்சில் காய் மற்றும் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதை இரண்டையும் இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக சுண்டிய பின் அருந்தலாம்.

 

  • இளநீரில் அரை தேக்கரண்டி சீரகப் பொடியை கலந்து உண்ணலாம்.
  • நீரில் வெள்ளரி விதை, சோம்பு, இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அவற்றை அரை தேக்கரண்டி எடுத்து கலந்து உண்டு வரலாம்
  • சர்க்கரையுடன் ஒரு தேக்கரண்டி யானை நெருஞ்சில் இலைச் சாறு எடுத்து, கலந்து உண்ணலாம்.
  • ஒரு பங்கு கொள்ளும் 10 பங்கு நீரும் சேர்த்துக் காய்ச்சி, நீரை வடித்துக் குடிக்கலாம்.

 

  • ஓமம், மிளகு இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்து, வெல்லம் சேர்த்துப் பிசைந்து கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம்.
  • 10 மிளகு மற்றும் ஒரு கைப்பிடி அருகம்புல் எடுத்து நீர் சேர்த்துக் காய்ச்சி வடித்து அருந்தலாம்.
  • நீரில் கால் டம்ளர் முள்ளங்கிச் சாறு மற்றும் அரை ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, கலந்து பருகலாம்.
  • நீரில் ஒரு கிராம் முருங்கை வேர்ப்பட்டைப் பொடியை கலந்து உண்ணலாம்.
    தேனில் மாதுளம் விதைப்பொடி அரை தேக்கரண்டி எடுத்து, கலந்து உண்ணலாம்.

 

  • ஒரு தேக்கரண்டி துளசி இலைச் சாறில் தேன் கலந்து உண்ணலாம்.
  • அரைக் கைப்பிடி நன்னாரி வேரில் நீர் சேர்த்துக் காய்ச்சி, வடித்து அதில் கால் தேக்கரண்டி கடுக்காய்த் தூள் சேர்த்து உண்டு வரலாம்.
  • பன்னீருடன் கால் தேக்கரண்டி வெந்தயப் பொடி சேர்த்து அருந்தலாம்.

 

  • சுரைக்கொடியை அரைக் கைப்பிடி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்து, அரை டம்ளராக சுண்டியபின் அருந்தலாம்.
  • ரோஜாப்பூ இதழ், நீர்முள்ளி இரண்டையும் அரைக்கைப்பிடி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்ற வைத்து அருந்தலாம்.