வாழ்வில் புரிதல் எவ்வளவு முக்கியம்

உணவே மருந்து தமிழ்

வாழ்க்கையில் வெற்றி பெற சரியான மற்றும் தவறான விசயங்களை சரியாக புரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும்.

வாழ்க்கையில் மன நிறைவுடன் வாழ்வது, மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் இருப்பது, பிற உயிர்களையும் மதிப்பது மற்றும் அவற்றிர்க்கு துன்பம் தராமல் இருப்பது, ஆக மொத்தம் நாமும் சந்தோஷமாக வாழ்வது மற்றும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதும்தான் வெற்றிகரமான வாழ்க்கை.இதற்கு வாழ்வின் புரிதல் மிகவும் இன்றியமையாதது.

இந்த வெற்றிகரமான வாழ்க்கையை அடைய நாம் நம்மை தயார்படுத்திக் கொள்வது அவசியம். நமது உடலும், மனதும் தூய்மையாக இருப்பின் நாம் நினைக்கின்ற எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் வலிமையும், வழியும் தானாக பிறக்கும். எந்த ஒரு செயலையும் செய்ய தொடங்கும் முன்னர் அது வெற்றி பெற முதலில் அந்த செயல் குறித்த புரிதல் மற்றும் அதற்கான திட்டமிடல் மிகவும் அவசியம் ஆகும். இவை இரண்டும் இருந்துவிட்டால் தைரியமாக செயலில் இறங்கலாம்.வெற்றியை நோக்கி பயணத்தை தொடங்கலாம்.

சிலர் தனியாக தொழில் செய்து அது நஷ்டமடையும்போது, தன்னைத்தானே நொந்துகொள்வது உண்டு. நமக்கு நேரம் சரியில்லை, எல்லாம் என் தலைவிதி, எனக்கு எதுவும் சரியாக அமையாது என்று புலம்புவார்கள். இப்படி புலம்புவது எந்த வகையிலும் சரியாகாது. இது மனதிற்கு இன்னும் அதிக சோர்வையே ஏற்படுத்தும். இன்னொரு முறை முயற்சிக்கும் எண்ணத்திற்கும் மாபெரும் தடையாக இருக்கும். எனவே தோல்வி ஏற்படும்போது, அதை இயல்பாக எடுத்துக்கொள்ள பழக வேண்டும். மன கஷ்டங்கள் இருந்தாலும் மனதிற்குள் நல்ல எண்ணங்களாகவே நினைக்க வேண்டும்.இந்த நிலையை சரியான புரிதலின் மூலம் எளிதில் அடைந்து விடலாம்.

ஏதோ இந்தமுறை சரியாக வரவில்லை அடுத்த முறை இப்படி நடக்காது என்று தனக்குத்தானே தைரியம் சொல்வதுபோல் நினைக்க வேண்டும். நம் எண்ணங்களுக்கு நம்மைவிட அதிக பலம் இருக்கிறது. இது ஏதோ ஊக்கப்படுத்தும் தத்துவம் என்று இல்லை, இது விஞ்ஞான பூர்வமாக நிருபிக்கப்பட்ட உண்மை. எனவே எண்ணங்களை எப்போதும், நேர்மறையாக  வைத்துக்கொள்வது வளர்ப்பதும் மிக மிக முக்கியம். அதுவே வெற்றிக்கான சிறந்த வழி.

நாம் சரியாக இருந்தாலும் சூழ்நிலை நமக்கு எப்போதும் சாதகமாக அமைவதில்லை. நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மிடம் பேசும்போது அவர்களது சொந்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறேன் என்று தேவை இல்லாத பயத்தை நம் மனதில் ஏற்படுத்தி விடுவார்கள். அதை புரிந்துகொண்டு எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும்.

நம்மை விட வயதில் மூத்தவர்கள், அனுபவஸ்தர்கள் சொல்லும் அறிவுரையை உதாசினப்படுத்த முடியுமா?.நிச்சயம் முடியாதுதான். அறிவுரைகள் ஏற்க்கப்பட வேண்டும். அனுபவத்தை விட ஒரு சிறந்த வழிகாட்டி இருக்க முடியாது.அவர்கள் தரும் அறிவுரையை எடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் அதை எந்த அளவிற்கு என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நம் செயலை தடைசெய்ய சொல்லப்படும் எச்சரிக்கைக்கும் அதை சரியாக வழிநடத்த பயன்படும் அறிவுரைக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதை கண்டறிய வேண்டும்.

கடைசியாக வெற்றிக்கும் முக்கியமான இன்னொரு விஷயம் ஒன்று இருக்கிறது. அது துணிவு. எதையும் உறுதிப்படுத்திக் கொண்டுதான் பின் முதல் அடி எடுத்துவைப்பேன் என்று நிற்க முடியாது. ஆகவே வருவது வரட்டும் ஒரு கை பார்ப்போம் என்ற துணிவு வேண்டும்.