நல்ல எண்ணங்கள் நல்ல வாழ்க்கை

உணவே மருந்து தமிழ்

நம் எண்ணங்கள் நமக்கு நன்மை அளிக்குமா இல்லையா என்று எளிதில்  கண்டுபிடித்துவிடலாம். நல்ல உணர்வுகளைத் தந்தால் அவை நல்ல எண்ணங்கள். நல்ல என்பதை விட ஆரோக்கியமான, நேர்மறை எண்ணங்கள் என்று சொல்லலாம். அப்படி இல்லாமல் மன உளைச்சலைத் தரும் எண்ணங்கள் உடல், மன நலத்துக்குக் கேடு செய்பவை ஆகும்.

உணர்வுகளை அறிந்துகொள்ளப் பெரிய வித்தைகள் தெரிய வேண்டியதில்லை. நமது முகமும் செயலும் காட்டிக் கொடுத்துவிடும். பெரும்பாலான உணர்வுகள் மறைத்துவைக்க முடியாதவை. பல நேரத்தில் அது பற்றிய தெளிவான வாக்குமூலத்தைச் சம்பந்தப்பட்டவர்களே அளிப்பதுண்டு. அதனால் சிக்கல் எதுவுமில்லை.

மேலும் இப்படி வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் எதிராளியின் செயல்கள், நம் உணர்வுகளை உடனே காட்டிக்கொடுத்து விடும். ஆனால், உணர்வுகள் தொடர்பான எண்ணங்கள் நுட்பமானவை. அவற்றை அறிவதற்கு நேரமும் ஆற்றலும் தேவைப்படும். எண்ணங்களை நேர்மறை, எதிர்மறை என்று வசதிக்காக மேலோட்டமாகப் பிரித்துக்கொள்வோம். நேர்மறை எண்ணங்கள் இருந்தால் நேர்மறை உணர்வுகளும் எதிர்மறை எண்ணங்கள் இருந்தால் எதிர்மறை உணர்வுகளையும் தெரிவிப்பது தான் இயல்பு.

தொடர் வண்டியில் கதவோரம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். வண்டி நல்ல வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. “இப்போது கை நழுவி வண்டியிலிருந்து விழுந்தால் என்னவாகும்?” என்ற எண்ணம் முதலில் வருகிறது. உடனே பயம் வருகிறது. ஓரடி பின் தள்ளி நிற்கிறீர்கள். இதிலிருந்து உங்கள் செயலும் உணர்வும் எண்ணத்தின் ஓட்டத்தைக் காண்பிக்கும் என்பது நிருபணமாகிறது.

வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குக் காத்திருக்கிறீர்கள். சுற்றி உட்கார்ந்து  இருப்பவர்களை நோட்டம் விடுகிறீர்கள். “இவர்கள் எல்லாரைவிடவும் நான் தேவலாம் போலயே!” என்ற எண்ணம் வருகிறது. அந்த நம்பிக்கை எண்ணம் ஒரு பெருமிதத்தை, உற்சாகத்தை தருகிறது. இப்போது உங்கள் உடல்மொழி மாறி நிமிர்ந்து உட்கார்ந்து அழைப்புக்குக் காத்திருக்கிறீர்கள். இப்போது புரிகிறதா? உங்கள் உணர்வுகளே எண்ணங்களைக் காட்டும் கண்ணாடிகள்.

பெரும்பாலும் அவை தவறு செய்யாது. இதே இரண்டு சூழ்நிலைகளில் எண்ணங்களை மாற்றிப் போட்டுப் பாருங்கள். நேர்முகத் தேர்வில் உட்காரும் போது இப்படித் தோன்றுகிறது: “இத்தனை பேர் வந்திருக்காங்க. யார் எப்படின்னு தெரியலை. நமக்குக் கிடைக்க வாய்ப்பு குறைவுதான்!” உடனே கை கட்டி தலை கவிழ்ந்து தோல்விக்கான உடல்மொழி தேர்வு செய்யப்படும். உங்களை நீங்கள் கவனிக்கச் சிறந்த வழி, ஒரு நாளில் எத்தனை மணி நேரம் உற்சாகமான உணர்வுகளில் திளைக்கிறீர்கள் என்று கணக்கிடுவதுதான்.

சூழ்நிலைகள் அனைவருக்கும் பொதுவானவை  தான். நம் எண்ணங்கள் தான்  தேர்வுகள். உணர்வுகளும் அதன் தொடர்ச்சியான செயல்களும் எண்ணங்கள் தரும் திசை நோக்கிச் செல்பவை. அதனால் சரியான எண்ணங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது அவசியம். மனத்தின் போக்கு இயல்பாக எதிர்மறை எண்ணங்களை அள்ளிக்கொண்டு வந்து கொட்டும். அவற்றைப் புறந்தள்ளி ஆக்கப்பூர்வமான நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுப்பதுதான் மனப் பயிற்சி. வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையில் இருந்து நாம் தவறாமல் படிக்கக்கூடிய விஷயம் இது ஒன்றே ஆகும்.

மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் நம்பிக்கையான எண்ணங்களைத் தேர்வு செய்து கொள்வது அவர்களின் வழக்கம். இதைப் பழக என்ன செய்ய வேண்டும்? எல்லாச் சூழலிலும் (எதிர்மறை எண்ணங்கள் வந்த போதிலும்) நம் செயலுக்கும் உணர்வுக்கும் அவசியப்படும் எண்ணங்களை முன்னிலைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு படுதோல்வியிலும் பாடம் படித்துக்கொண்டு மீண்டும் புதிதாக முயலத் தேவை, இந்த நேர்மறை எண்ணங்கள் என்பதை நாம் நிமநிதுக் கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து பழகும்போது உங்களை அறியாமல் ஒரு மகிழ்ச்சியான மனிதராக நீங்கள் மாறுவதை உணர்வீர்கள்.

எல்லாம் மற்றவர்களிடமிருந்து வர வேண்டும் என்று எதிர் பார்க்காமல் நம்மிடமிருந்து நமக்காக வர வேண்டும். அகத்தில் தேவையற்ற குப்பைகளைத் தவிர்த்தாலே முகத்தில் புன்னகை வந்து விடும். ஒவ்வொரு நாளும் நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகத் தான் நாம் இருக்கிறோம். அப்படியானால் நம் எண்ணங்களும் அதைப் பற்றியதாகவே இருக்க வேண்டும். நம் இலக்குகளைப் பற்றிய எண்ணங்களை சுற்றி சுற்றி ஓட விடுங்கள். நம் எண்ணங்களுக்கு ஆதரவாய் இருப்பது அடுத்தவர்கள் அல்ல. நமது ஆழ்மனம் தான். நல்ல எண்ணங்களை உற்பத்தி செய்து அதை இயக்கும் இயக்குநராக மனதைப் பழக்கப்படுத்தும் போது அது வழக்கமாகவே மாறி விடும்.சிந்தனை செய் மனமே !