இதய நோயை வரவழைக்கும் துரித உணவு

மிகுந்த உப்பும் , கொழுப்பும் கொண்ட புரதம், விட்டமின் , கனிச்சத்துக்கள் மிகக்குறைந்த அளவு அல்லது அறவே இல்லாத உணவுகள் துரித உணவுகள் என வரயறுக்கப் படுகின்றன.மேலும் உடல் பருமன் அதிகரிப்பு ஒன்றே துரித உணவின் பிரதான செயலாகும்.

உணவே மருந்து-தமிழ்

துரித உணவுகளினால் வரும் நோய்கள்

  1. உச்சந்தலை முதல் அடிப்பாதம் வரை பாதிக்கப்படும். மன அழுத்தம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
  2. உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இதனால்,  நுரையீரலுக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்து, சோர்வு உண்டாகும்.
  3. தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குறட்டை அதிகளவில் வெளிப்படும்.
  4. இதயத்தில் கொழுப்பு படிவதால், ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
  5. கல்லீரலில் கொழுப்பு ஏராளமாக சேர்ந்து, எரிச்சல் உண்டாக்கி சுருங்கும் வாய்ப்பு உண்டு.
  6. மலச்சிக்கல், எலும்புகள் பலவீனம் ஆதல், எலும்பு தேய்மானம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
  7. பெருங்குடலில் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
  8. தொற்றுநோய் அல்லாத நீரழிவு
  9. பற்களில் வரும் நோய்கள்
  10. நாளமில்லாச் சுரப்பிகளில் வரும் நோய்கள் (முன்கழுத்து கழலை, தைராயிட்)

பர்கர், பீட்சா மற்றும் மென்பானங்கள் இவற்றிற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக திகழ்கின்றன.இந்த உணவு வகைகளில் சத்தில்லாமல் ஊளைச் சதையே பெருகும். இயந்திர வாழ்க்கையின் காரணமாக இந்த துரித உணவுகள் பயன்பாட்டுக்கு வந்தன. சமைப்பது எளிது, வித்தியாசமான சுவை, குறைவான நேரம் என்ற காரணங்களால் துரித உணவுகளுக்கு மக்கள் மாறிவிட்டார்கள். ஆனால், இவ்வகை துரித உணவுகளில் எண்ணற்ற பிரச்னைகள் இருக்கின்றன. உணவின் சுவையை கூட்ட கலக்கப்படும் ரசாயனங்கள் முதல், சமைக்கும் முறை வரையிலும் பல பிரச்சனைகள் துரித உணவுகளில் இருக்கின்றன.

பீட்சா, பர்கர், நூடுல்ஸ் ஆகிய துரித உணவு வகைகளைத் தயாரிப்பதற்குத் தேவையான முக்கிய மூலப்பொருட்களான, மீன், முட்டை மற்றும் காய்கறிகள், சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படும் புளி, தக்காளி, பச்சை மிளகாய் கலவை போன்றவை பல நாட்களுக்கு முன்னரே சமைக்கப்பட்டு, பல நாட்கள் வரை கெட்டுப்போகாத வண்ணம் பதப்படுத்தப்பட்டு வைக்கப் படுகின்றன. இவ்வாறு உடல் நலத்துக்குக் கேடு ஏற்படுத்தும் வகையில் சமைக்கப்படும் இந்த உணவு வகைகளால் தீமைகள்தான் அதிகம். இவற்றில் எந்தவிதமான ஊட்டச்சத்தும் கிடைப்பது இல்லை. அதற்குப் பதிலாக கலோரிகள்தான் ஏராளமாக உள்ளன. கலோரிகள் மட்டுமே அதிகமாக காணப்படுகிற துரித வகை உணவுப்பண்டங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.

இன்று இட்லி, தோசை, புட்டு ஆகிய பாரம்பரிய உணவுப் பண்டங்கள் ஒதுக்கப்பட்டு பீட்சா, ஃப்ரென்ச் ஃப்ரை, பர்கர் என பலவிதமான துரித உணவு வகைகள் நம்முடைய வாழ்வில் என்றோ நுழைந்து விட்டன. பீட்சாவில் காய்கறிகள் குறைவாக இருக்கும். பர்கர் என்று பார்க்கும்போது, இதை செய்வதற்குத் தினமும் சாப்பிடுகிற சிறிய ரொட்டி போதுமானது. ஆனால், அன்றாடம் நாம் சாப்பிடுவதை விட, பர்கர் செய்ய பயன்படுத்தப்படும் ரொட்டி  3 அல்லது 4 மடங்கு அளவில் பெரியதாக காணப்படும். இதிலும், மீன், ஆட்டுக்கறி, பீன்ஸ், கேரட், கோஸ் போன்ற காய்கறிகள் கொஞ்சமாகத்தான் சேர்க்கப்படுகின்றன. எண்ணெயில் பல தடவை நன்றாக பொரித்த உருளைக்கிழங்கு துண்டுகளைத்தான் ஃப்ரென்ச் ஃப்ரை என்ற பெயரில் துரித உணவில் சாப்பிடுகிறோம். பொதுவாக, இந்த வகை உணவுப்பண்டங்களில் மைதா, கொழுப்பு சத்து போன்றவைதான் அளவுக்கு அதிகமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல், இந்த உணவில் சேர்க்கப்படும் பாலாடைக்கட்டி கொழுப்பின் அளவு அதிகரிக்க வழி செய்கிறது. பீன்ஸ், கேரட், கோஸ் போன்ற காய்கறிகள் இவற்றுடன் குறைவாகவே சேர்த்து தரப்படுகின்றன.

உணவகங்களில், நூடுல்ஸ், பீட்சா, பர்கர் என சாப்பிடும்போது குளிர்பானங்களையும் குடிக்கின்றனர். இந்த குளிர்பானங்களில் அதிக சர்க்கரை, கார்பன் டை ஆக்ஸைடு, சில ரசாயன கலவைகள் போன்ற உடலுக்குக் கெடுதியான விஷயங்களே இருக்கின்றன.

இதனால் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். நமது முன்னோர்கள் பின்பற்றிய உணவு முறையை இப்போது யாரும் பின்பற்றுவது இல்லை. அந்த உணவுப் பழக்கத்துக்கு மாறினால் உடல் ஆரோக்கியம் சீராகும்.

இந்த தகவலை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்