மண்பானை உணவு ரத்தக் குழாய்களைச் சீராக்க உதவும்

நம் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று பொங்கல் கொண்டாட்டத்தில், புத்தாடை உடுத்தி, வாசலில் கோலமிட்டு,  புதிய மண்பானையைக் கொண்டு  புதியதாக விளைந்த அரிசியில் பொங்கலிடுவது வழக்கம். இவ்வாறாக  பொங்கல் திருநாளில் மட்டுமல்லாது முந்தைய தலைமுறை மக்கள் அன்றாட சமையல் பயன்பாட்டில், மண்பாண்டங்கள் முக்கிய இடம் பிடித்தன. முன்பெல்லாம், நாம் சமைக்கிற பாத்திரம் மட்டுமில்லாமல், தண்ணீர் சேமிக்கும் பாத்திரம் முதல் சாப்பிடக்கூடிய தட்டு வரைக்கும் எல்லாமே மண் பாத்திரங்கள்தான்.

இரும்பு, பித்தளை, வெண்கலம்னு என பலவகையான பாத்திரங்கள் வந்தாலும் அதை வாங்குற சக்தி இல்லாதவங்களுக்கு கையில கிடைச்ச மண்ணைப் பிசைஞ்சி செஞ்ச பாத்திரங்கள்தான் உபயோகத்தில் இருந்தன.ஆனால், தற்காலத்தில் ‘நாகரிகம்’ என்ற பெயரில், அவற்றையெல்லாம் நாம் மறந்துவிட்டு, பொங்கலன்று கூட அலுமினியம், எவர்சில்வர், நான்ஸ்டிக் பாத்திரங்களில் கடமைக்காகப் பொங்கல் வைப்பதே பெரும்பாலும் நடக்கிறது. அண்மைக் காலமாக, மக்களிடையே பாரம்பரிய முறையில் சமைக்கும் உணவு வகைகள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது.

மண்பானையில் சாதம், மீன்குழம்பு, ஆப்பம், பணியாரம் எல்லாம் செய்கிறார்கள்.மேலும் இவற்றைச் சமைக்க அலுமினியம், காப்பர், எவர்சில்வர் பாத்திரங்களுக்குப் பதிலாக மண்பாண்டங்களையே பயன்படுத்துகிறார்கள். மண்பானையோட அருமையை உணர்ந்து, இன்றைக்கு நட்சத்திர உணவகங்களில் கூட மண்பானைச் சமையலில் உணவுகளை சமைத்து அசத்துகிறார்கள்.நகரங்களில் சில உணவகங்களில், ‘மண்பானை சமையல்’ என்றும் கூட அறிவிப்பு பலகைகளை வைத்து மக்களை ஈர்த்து விடுகிறார்கள். உணவகங்களிலும் மண்பாண்டங்களில் சமைத்துப் பரிமாறுவதையே வாடிக்கையாளர்கள் அதிகமாக விரும்புகின்றனர். அப்படிப்பட்ட மண்பாண்டங்களைக் கொண்டு உணவு சமைப்பதால் வரும் நன்மைகளைப் பற்றி இங்கு காணலாம்.

  • மண்பானைகளில் சமைக்கிற உணவு மற்றும் அதன் ருசி விரைவில் கெட்டுப் போகாது. குறிப்பாக மண்பானையில வைக்கிற மீன் குழம்பு ஒரு வாரம்கூட கெட்டுப் போகாமல் இருக்கும்.
  • மற்ற பாத்திரங்களில் வைக்கும் உணவுப் பொருள்கள், கோடை காலங்களில்  நீர்த்துப் போய்விடும்.ஆனால், மண்பானையின் தன்மையால் அது நீர்த்துப் போகாது.
  • மண்பானைத் தண்ணீரைக் குடித்தால் நோய் எதுவும் வராது.
  • இயற்கை உணவுகள் உடலுக்குத் தேவையான சத்துகளுடன், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கக்கூடியவை.அவற்றை முறையாக மண்பானையில்  சமைத்து உண்ணும்போது அதன் முழுச்சத்தும் நம் உடலுக்குக் கிடைக்கும்.  மேலும் உணவின் தன்மை மாறாமல், சுவையை அதிகரிக்கக்கூடியது.
  • மண்பானைப் பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவு எளிதில் செரிமானாகும்.  இப்போது கிடைக்கும் பாத்திரத்தில் உலோகத்தன்மை இருப்பதால், உணவின் தன்மையை மாற்றி விடுகிறது.

 

  • பொதுவாக, உணவைச் சமைக்கும் போது, உணவில் உள்ள தாதுக்கள் உள்ளிட்ட முக்கியமான சத்துகள் ஆவியாகிவிடும். குறிப்பாக, பச்சைக் காய்கறிகளில் உள்ள குளோரோஃபில் எளிதில் ஆவியாகிவிடும். ஆனால், மண்பானையில் சமைக்கும் போது அதிலுள்ள சத்துகள் வீணாகாமல் அப்படியே கிடைக்கும்.
  • மண்பானையில் உள்ள நுண் துளைகளால் உணவுக்குள் வெப்பம் சீராகவும், சமநிலையிலும் ஊடுருவும்.இதனால் மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவைப் போன்ற தன்மையைப் பெறும். இது உடல் ஆரோக்கியத்திற்க்கு மிகவும் நல்லது.
  • மண்பானைச் சமையலுக்கு அதிக எண்ணெய் தேவைப்படாது. அது உணவுக்குத் தேவையான எண்ணெயை மட்டுமே எடுத்துக்கொள்ளும். இதுவும் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியக் காரணம்.

 

  • மண்பானையில் உள்ள சிறிய நுண் துளைகள் வழியே உணவில் உள்ளே இருக்கும் நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டேயிருக்கும்.பானையின் வெப்பமும், பானையின் உள்ளேயிருக்கும் நீரில் உள்ள வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம் வெளியேற்றப்படுவதால் உள்ளே இருக்கும் நீர் குளிர்ந்த நிலையிலேயே இருக்கும். எனவே, குளிர்விப்பானில் இருக்கும் நீர் பனிக்கட்டியாவது போன்று, பானையில் இருக்கும் நீர் எந்த நிலைக்கும் மாறாது.
  • மண்பானையில் சமைத்த உணவை அடிக்கடி சூடுபடுத்தத் தேவையில்லை. மற்ற பாத்திரங்களை விட சீரான வெப்பநிலையை அதிக நேரம் பராமரிக்கும். அதனால், மண்பானையில் சமைக்கும் உணவு நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.
  • மண்பானையானது நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்கும். இதனால்தான் அந்தக் காலங்களில் மீன் குழம்பை ஒரு வாரம் வரைகூட வைத்திருந்து சாப்பிட்டாலும் எந்தப் பிரச்னையும் ஏற்பட்டதில்லை.

 

  • மண்பாண்டங்கள் உணவில் உள்ள அமிலத் தன்மையைச் சமன்படுத்தும் தன்மை கொண்டவை. நல்ல பசியையும் நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவும்.
  • குழந்தையின்மைப் பிரச்னை ஏற்படாமல் தடுக்கும். மண்பானை உணவு ரத்தக் குழாய்களைச் சீராக்க உதவும். உடல் சூட்டைத் தணிக்கும்.

அறுசுவையான உணவும் ஆரோக்கியமான உணவும் கிடைக்க வேண்டும்    என்றால் மண்பானையில் சமைத்துச் சாப்பிடுவதே சிறந்தது.